செய்திகள்
நச்சலூர் பகுதியில் மது விற்ற 6 பேர் கைது
நச்சலூர் பகுதியில் மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நச்சலூர்:
நச்சலூர் பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மது விற்று கொண்டிருந்த நச்சலூர் ரெட்டைவாய்க்கால் பகுதியில் பாலன் (வயது 42), வி.ஆர்.ஓ.காலனியில் பூமாலை (55), நெய்தலூர் காலனி பகுதியில் சுப்பிரமணியன் (58), நாகராஜ் (45), மேலப்பட்டியில் பாலசுப்பிரமணியன் (43), சூரியனூரில் லெட்சுமணன் (43) ஆகியோர் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 66 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், தோகைமலை அருகே உள்ள கல்லடை பிரிவு ரோட்டு பகுதியில் ரெங்கராஜ் (51) என்பவர் அவரது பெட்டிக்கடையிலும், போத்துராவுத்தன்பட்டி உடையானூரில் முருகேசன் (48) என்பவர் அவரது பெட்டிக்கடையிலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.