செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மருந்து, மாத்திரைகள். கைதான போலி டாக்டர் முருகன்தவமணி

குடிமங்கலம் அருகே போலி டாக்டர் கைது

Published On 2021-04-21 20:21 GMT   |   Update On 2021-04-21 20:21 GMT
குடிமங்கலம் அருகே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
குடிமங்கலம்:

குடிமங்கலம் அருகே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வயலூரை சேர்ந்தவர் முருகன்தவமணி (வயது 44) இவர் குடிமங்கலம் அருகே பூளவாடியில் வீடு எடுத்து தங்கி, பூளவாடி மற்றும் பெரியபட்டியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கிளினிக்குகள் தொடங்கி பொதுமக்களுக்கு பொதுமருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய கிளினிக்கிற்கு மருத்துவ சிகிச்சைக்காக பூளவாடியை சேர்ந்த சரஸ்வதி ( 60) என்பவர் சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின் சரஸ்வதியின் உடல்நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற நிலையில் பரிதாபமாக சரஸ்வதி உயிரிழந்தார்.

இதனால் சரஸ்வதியின் உறவினர்களுக்கு முருகன்தவமணி அளித்த சிகிச்சை மீது சந்தேகம் எழுந்தது. அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட இணை இயக்குனரிடம் (சுகாதாரப்பணிகள்) முருகன் தவமணி குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இணை இயக்குனர் உத்தரவின் பேரில் குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் பூளவாடியில் உள்ள முருகன்தவமணியின் கிளினிக்குக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது முருகன்தவமணி மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் எதுவும் இல்லாமல் போலி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குடிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முருகன்தவமணியை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் முருகன்தவமணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.காம்படித்து விட்டு, பழனி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வந்ததும், அந்த அனுபவத்தை கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News