கொரோனா விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சுக்கு அபராதம்
திருச்சி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பரவலை கட்டுப்படுத்த பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யக் கூடாது என்றும், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டு விதி முறைகளை மக்கள் கடை பிடிக்கிறார்களா என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து, கடைபிடிக்காதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் திருவெறும்பூர் பகுதி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றி செல்வதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் திருவெறும்பூர் பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த பஸ்சில் அதிக அளவு பயணிகளை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ரூ.500 அபராதம் விதித்து, பொது மக்கள் சுகாதார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர்.