செய்திகள்
காருண்யா வளாகம் கொரோனா சிகிச்சை மையமாக செயல்படும்- பால் தினகரன் தகவல்
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்துக்கொள்ள டாக்டர் பால் தினகரன் அனுமதி வழங்கியுள்ளார்.
கோவை:
தமிழகம் முழுவதும் தற்போது 2-வது கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்துக்கொள்ள காருண்யா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் அனுமதி வழங்கினார். அதனை தொடர்ந்து ஆண் மற்றும் பெண்கள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அங்கு 400 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர உணவு கூடமும் உள்ளது.
ஏற்கனவே இந்த மையம் கடந்த ஆண்டு கொரோனா பரவிய போதும் கொரோனா தடுப்பு சிகிச்சை மையமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் காருண்யா நிகர்நிலை பல்கலை வேந்தர் டாக்டர். பால் தினகரன் ஆலோசனையின்பேரில் சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி சுத்திகரிப்பு திரவம், சீசா தொண்டு நிறுவனம் மூலம் சானிடைசர், முகக் கவசம் போன்றவற்றை தயாரித்து அரசு மற்றும் பொதுமக்களின் உபயோகத்திற்கு வழங்கியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்காக டாக்டர். பால் தினகரனை பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.