செய்திகள்
மீன்கள்

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீன் வரத்து குறைவு

Published On 2021-04-16 05:03 GMT   |   Update On 2021-04-16 05:03 GMT
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ராமநாதபுரம்:

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப். 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை உள்ள 61 நாள்களுக்கு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோழிய குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த தடை காலத்தின்போது படகுகள் மற்றும் வலைகளை சீரமைப்பதுடன் வர்ணம் பூசும் பணியிலும் மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அதிக நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் மீண்டும் தடை காலம் 61 நாள்கள் அமலுக்கு வந்துள்ளது.

விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் இறைச்சி மற்றும் கோழி கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்பட்டது.

Tags:    

Similar News