செய்திகள்
முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே உள்ள குன்னலூர் தர்க்காஸ் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெபமாலை(வயது46). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தபோது அப்பகுதியில் சென்ற பாம்பு, ஜெபமாலை காலில் கடித்தது.
இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபமாலை உயிரிழந்தார்.
இது குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.