செய்திகள்
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் கோழிக்கறி விற்பனை நடைபெற்ற போது எடுத்த படம்.

தஞ்சையில் கோழி இறைச்சி விலை உயர்வு

Published On 2021-04-12 16:09 GMT   |   Update On 2021-04-12 16:09 GMT
தஞ்சையில் கோழி இறைச்சி விலை உயர்ந்து கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. ஒரு வாரத்தில் ரூ.20 அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர்:

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் சமைத்தாலும் விதவிதமான அசைவ உணவுகளை ஓட்டல்களில் இருந்து அன்றாடம் வீட்டிற்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு அசைவ பிரியர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஓய்வு நேரத்தில், விடுமுறை நாளில் மட்டுமே அசைவம் சாப்பிட்ட நிலை இப்போது மாறிவிட்டது.

முன்பெல்லாம் அசைவ உணவுகளுக்காகவே நாட்டுக்கோழிகளை வீட்டில் வளர்த்தவர்களும் உண்டு. பிராய்லர் கோழிகள் என்பதெல்லாம் மருந்துக்கும் அப்போது கிடையாது. கிராமத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் சிறுதானியங்களை கொறித்து தின்றுவிட்டு உற்சாகமாக அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தன நாட்டுக்கோழிகள்.

ஆனால் பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு அளவுக்கு அதிகமாக தீவனத்தை சாப்பிட்டுவிட்டு எங்கும் நகர வழியின்றி வாழ்கிறது பிராய்லர் கோழி. விடுமுறை காலங்களில் இறைச்சி விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக உள்ளதால் கோழி இறைச்சியின் பயன்பாடே தற்போது மிகவும் அதிகமாக உள்ளது.

சமைப்பது எளிது, சுவை போன்ற காரணங்களால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதுவும் நாட்டுக்கோழிகளை விட பிராய்லர் கோழி இறைச்சியை தான் அதிகம்பேர் விரும்பி வாங்குகின்றனர். கோழி இறைச்சியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் விலையும் அதிகரித்து வருகிறது. தஞ்சை கீழவாசல், தொம்பன்குடிசை, மருத்துவக்கல்லூரி சாலை, புதுக்கோட்டை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் கோழி இறைச்சி கடைகள் உள்ளன. கோழி இறைச்சி வாங்குவதற்காக மக்கள் அதிகஅளவில் வந்திருந்தனர்.

கடந்த வாரம் வரை 1 கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ.170 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று ஒரு கிலோவுக்கு ரூ.20 வரை விலை உயர்ந்து 1 கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ.190 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. உயிர் கோழி ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழியின் விலை அதிகமாக இருப்பதால் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்கி வந்த நிலையில் தற்போது அதன் விலையும் அதிகரித்து வருகிறது. அதேபோல் தஞ்சையில் முட்டைகளின் விலையும் அதிகரித்து இருந்தது. 30 முட்டைகள் ரூ.135-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News