கொரோனா சிகிச்சைக்கு வருபவர்களிடம் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருவதால் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நடுத்தர வர்க்கத்தினரும், வசதி படைத்தவர்களும் தனியார் ஆஸ்பத்திரிகளை நாடி செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணங்களும் தாறுமாறாக உள்ளது. ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெறுபவர்களிடம் ரூ.3 முதல் 5 லட்சம் வரை வசூலிக்கிறார்கள். அதுவே ஆக்சிஜன் தேவைப்பட்டால் தினமும் ரூ.1 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாதாரண மக்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்கிறார்கள். அவர்கள் ஆஸ்பத்திரி கட்டணத்தை செலுத்த படாதபாடு படுகிறார்கள். கடனாளியாகவே மாறி விடுகிறார்கள்.
இன்சூரன்ஸ் வசதி இருப்பவர்களை ராஜமரியாதையுடன் கவனிக்கிறார்கள். அவர்கள் தேவையான கட்டணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வாங்கி விடுகிறார்கள்.
கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பலர் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்கிறார்கள். அவர்களிடம் பரிசோதனை கட்டணம் ரூ.5 ஆயிரம் வாங்குகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மீது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.