சேலம் அருகே நண்பர் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்- கூலிதொழிலாளி கைது
சேலம்:
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், காட்டுவளவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 25) கொத்தனார். இவரது மனைவி மீனா (22). இவர் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
என் கணவரின் நண்பர் அதே ஊரை சேர்ந்த வேலு (31). கல் உடைக்கும் தொழிலாளி. என் கணவருடன் வீட்டுக்கு வரும்போது என்னிடம் தவறாக பேசிவந்தார். மேலும் கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் வீட்டுக்கு வந்து ஆபாசமாக பேசினார். நீங்கள் என் அண்ணன் என அவரிடம் தெரிவித்தும் பொருட்படுத்தாமல் ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார்.
இதுகுறித்து சட்டசபை தேர்தலுக்கு முன் கணவரிடம் தெரிவித்தேன். அவர் எச்சரித்தபோது நான் அப்படி தான் செய்வேன் என வேலு மிரட்டினார். நேற்று முன்தினம் என் தாய்வீட்டில் இருந்தபோது அங்கு வந்த வேலு ஏன் உன் கணவரிடம் இதைபற்றி கூறினாய் என என்னிடம் கேட்டார். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறி மிரட்டினார்.
எனவே வேலுவை கைது செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து வேலு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.