செய்திகள்
தக்காளி

தென்னம்பாளையம் சந்தையில் தக்காளி விலை சரிவு

Published On 2021-04-10 03:54 GMT   |   Update On 2021-04-10 08:03 GMT
தென்னம்பாளையம் சந்தையில் தக்காளி விலை சரிவடைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையத்தில் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்டவை விற்பனை செய்யும் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு செல்கிறவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்வார்கள். இதுதவிர சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகளும் ஏராளமாக உள்ளன. விவசாயிகளிடம் இருந்து காய்கறி உள்ளிட்டவைகளை நேரடியாக வாங்கி இவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தென்னம்பாளையம் சந்தையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து விலை சரிவடைந்து வருவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். தக்காளிகளை விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள்.

இது குறித்து தக்காளி வியாபாரிகள் கூறியதாவது:-

தென்னம்பாளையம் சந்தைக்கு உடுமலை, ஆண்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தக்காளிகளை வாங்கி மொத்த விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாகவே தக்காளியின் உற்பத்தி அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துவிட்டது. இதனால் விலை நாளுக்கு நாள் குறைய தொடங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை மொத்த விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.3 முதல் ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவால் மிகுந்த கவலையில் உள்ளோம். சில்லரை வியாபாரிகள் இதனை ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை தக்காளியின் தரத்திற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News