செய்திகள்
கட்டிடத்தில் தீப்பற்றி எரிவதையும் தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அணைப்பதையும் காணலாம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்கக அலுவலகத்தில் தீ விபத்து

Published On 2021-03-30 01:56 GMT   |   Update On 2021-03-30 01:56 GMT
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்கக அலுவலகத்தில் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்கக (டி.பி.ஐ) வளாகத்தில் செயல்பட்டு வரும் தொடக்க கல்வித்துறை இயக்கக கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் அதிகாலை திடீரென கரும்புகை வெளியேறியது.

இதைக்கண்ட அங்கிருந்த ஊழியர்கள் சிலர், அந்த கட்டிடத்தின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது தீ கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் எழும்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, பற்றி எரியும் தீயை அணைக்க முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த தீ விபத்தில் கல்வித்துறையை சார்ந்த சில ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவித்தனர். இந்த தீ விபத்தால அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News