செய்திகள்
கூத்தாநல்லூர் அருகே மூங்கில் தோப்பு தீப்பிடித்து எரிந்தது
கூத்தாநல்லூர் அருகே மூங்கில் தோப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ அணைத்தனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள, மேல்கொண்டாழி கிராமத்தில் உள்ள ஒரு மூங்கில் தோப்பில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், மூங்கில் மரங்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அப்போது மூங்கில்கள் வெடித்து சிதறியதால் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிராம மக்கள் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் மற்ற இடங்களிலும், வீடுகளுக்கும் பரவாமல் அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான மூங்கில் மரங்கள் சேதம் அடைந்தது. இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.