செய்திகள்
நாமக்கல்லில் வெளிமாநில லாட்டரி விற்ற தந்தை, மகன் கைது
நாமக்கல்லில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் பஸ் நிலைய பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள பொது கழிவறை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், அவர்கள் நாமக்கல் டவுன் மோகனூர் ரோட்டில் உள்ள ராஜாஜி நகரை சேர்ந்த கண்ணன் (வயது 62), மற்றும் அவரது மகன் செந்தில்குமார் (39) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் 2 பேரும் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வெள்ளை நிற துண்டு சீட்டுகளில் எழுதி, லாட்டரி சீட்டுகள் போல விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட வெள்ளை நிற சீட்டுகளும், ரூ.300-ம் பறிமுதல் செய்யப்பட்டது.