திருப்பூர் அருகே விபத்து: புதுமாப்பிள்ளை-தொழிலதிபர் பலி
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள முத்தூர் அர்ஜனா புரத்தை சேர்ந்தவர் ரேவன்த் (வயது 26). டிரைவராக உள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு ரேவன்த் அர்ஜனாபுரத்தில் இருந்து நத்தக்காடையூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நத்தக்காடையூர் அருகே வந்த போது அவர் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறியது. இதனால் எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் இருந்த பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ரேவன்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரேவன்த்துக்கு திருமணமாகி 10 மாதமே ஆன நிலையில் ராஜேஷ்வரி என்ற மனைவி உள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
இதேபோல் காங்கயம் அடுத்த கணபதி பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு குமார் (37) வெள்ளகோவிலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு திலகா (30) என்ற மனைவியும், 7வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு பணியை முடித்து விட்டு விஷ்ணு குமார் வீட்டிற்கு புறப்பட்டார்.
நத்தக்காடையூர் காங்கயம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது வளைவில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணு குமார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காங்கயம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.