கயத்தாறு அருகே இளம்பெண் விபத்தில் பலி
கயத்தாறு:
கடையநல்லூர் அருகே உள்ள சிவராமபேட்டை முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 29). இவரது மனைவி மாரியம்மாள் (23). இவர்களுக்கு 1½ வயதில் பானுமதி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று கருப்பசாமி மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தையுடன் தூத்துக்குடியில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றார். பின்னர் இரவு அவர்கள் கயத்தாறு வழியாக ஊர் திரும்பினர். அய்யனார்வூத்து பகுதியில் அவர்கள் வந்த போது குறுக்கே ஒரு நாய் சென்றது. இதனால் கருப்பசாமி திடீரென பிரேக் போட்டார். அப்போது நிலைதடுமாறிய மாரியம்மாள் தலைகுப்புற கவிழ்ந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கருப்பசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக குழந்தை பானுமதிக்கு காயம் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு கயத்தாறு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பலியான மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.