செய்திகள்
கோப்பு படம்.

சிறுகனூர் அருகே ஏரியில் குளிக்கச்சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி

Published On 2021-03-01 11:33 GMT   |   Update On 2021-03-01 11:33 GMT
சிறுகனூர் அருகே ஏரியில் குளிக்கச்சென்ற சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் குளித்த இளம்பெண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமயபுரம்:

சிறுகனூர் அருகே உள்ள தச்சங்குறிச்சி தேரடி தெருவைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் விவசாயி. இவருடைய மகள் நிஷாந்தினி (வயது 8). இவரும் சமத்துவபுரத்தை சேர்ந்த மனோகரின் மகள் மகேஸ்வரியும் (வயது 21) நேற்று மாலை அந்தபகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்கச்சென்றனர். இருவரும் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இருவரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினர். அப்போது மகேஸ்வரி "காப்பாற்றுங்கள்", "காப்பாற்றுங்கள்" என்று சத்தம்போட்டார். அதைக்கேட்டு அந்தபகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மற்றும் பொதுமக்களும் ஏரியில் குவியதொடங்கினர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களில் சிலர் ஏரியில் குதித்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இருவரையும் அருகில் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி நிஷாந்தினி பரிதாபமாக இறந்தார். மகேஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய தகவல் இருந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News