செய்திகள்
மரணம்

திருப்பத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

Published On 2021-02-24 15:19 GMT   |   Update On 2021-02-24 15:19 GMT
திருப்பத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா பெரியகரம் கொல்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 32). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சாமுடி (37) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் லட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற தாய் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று அந்தப்பகுதியில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் கால்தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி லட்சுமியை மீட்டபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 வருடங்கள் ஆனதால், உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News