செய்திகள்
குடிநீர் கேட்டு கொட்டும் மழையில் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

குடிநீர் கேட்டு கொட்டும் மழையில் பெண்கள் சாலை மறியல்

Published On 2021-02-21 01:02 GMT   |   Update On 2021-02-21 01:02 GMT
குன்னத்தூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு கொட்டும் மழையில் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னத்தூர் ஊராட்சி நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். எனவே இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று அன்னூர்- சத்தி சாலையில் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவரும், அன்னூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். இதற்கிடையே அப்போது அந்த பகுதியில் திடீரென்று மழை பெய்தது. ஆனாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதன்பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்
Tags:    

Similar News