ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம் - பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்ததால் இறந்ததாக புகார்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசெல்வம். இவரது மகள் தாரணி (வயது19). இவர் கீழக்கரை தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் தாரணி காயங்களுடன் உச்சிப்புளி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தாரணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாரணியின் தந்தை வீரசெல்வம், சகோதரர் கோபிநாத் (21) மற்றும் திருப்பாலைக்குடி, வாணி பகுதியைச் சேர்ந்த 2 பேர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரணி மரணம் குறித்து வெளியான தகவல்கள் வருமாறு:-
வீரசெல்வத்தின் மனைவி கவிதா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்களது வீட்டில் இருந்த மாடு, நாய் மர்மமாக இறந்தன. இதற்கு கவிதாவின் ஆவிதான் காரணம் என சிலர் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் தாரணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் கவிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்ததால்தான் பாதிப்பு ஏற்பட்டது என்றும், கவிதாவின் ஆவிதான் அவரை பிடித்திருப்பதாக வும் வீரசெல்வத்திடம் சிலர் கூறினர்.
மேலும் கோடாங்கியிடம் அழைத்து சென்று பேய் ஓட்டும்படியும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய வீரசெல்வம் திருப்பாலைக்குடி கோடாங்கி, ராமநாதபுரம் அருகே உள்ள வாணியைச் சேர்ந்த பெண் பூசாரி ஆகியோரிடம் தாரணியை அழைத்து சென்றுள்ளார். அங்கு பேய் ஓட்டுவதாக கூறி சாட்டை மற்றும் சிறு குச்சியால் அடித்ததால் தாரணி மயங்கியதாகவும், அவருக்கு வேறுசில பரிகாரங்கள் செய்ததாகவும் இதில் தான் தாரணி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபக் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.