செய்திகள்
கைது

போலி பத்திரம் மூலம் 2½ ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றவர் கைது

Published On 2021-02-18 07:58 GMT   |   Update On 2021-02-18 07:58 GMT
போலி பத்திரம் மூலம் 2½ ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகிரு‌‌ஷ்ணன். விவசாயி. இவர் பனையக்கோட்டையை சேர்ந்த செல்வநாயகி என்பவரிடம் இருந்து கம்பர்நத்தம் கிராமத்தில் 2½ ஏக்கர் நிலத்தை கடந்த 2017-ம் ஆண்டு வாங்கி விவசாயம் செய்து வந்தார். ஆனால் பனையக்கோட்டையை சேர்ந்த 62 வயதான முதியவரான சுப்பிரமணியன், இந்த நிலம் தனக்கு சொந்தமானது எனவும், அதே கிராமத்தை சேர்ந்த தனது மைத்துனரிடம் இருந்து 2021-ம் ஆண்டு நிலத்தை வாங்கியுள்ளதாக கூறி அதற்கான ஒப்பந்த பத்திரத்தையும் காண்பித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராதாகிரு‌‌ஷ்ணன் இது குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்தார். அந்த புகார் மனுவை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதா விசாரணை நடத்தி வந்தார்.

அதில் செல்வநாயகியின் குடும்பத்திற்கு வாரிசுகள் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி சுப்பிரமணியன் போலியாக பத்திரம் தயாரித்து அந்த நிலத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து பாபநாசம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலி பத்திரம் மூலம் அபகரிக்க முயன்ற நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
Tags:    

Similar News