செய்திகள்
தூத்துக்குடியில் ஒரே நாளில் 782 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 782 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
தூத்துக்குடி:
வசந்த பஞ்சமி தினமான நேற்று பிராணிகளின் உணர்வுகள் மற்றும் நலனை பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் பிராணிகள் நலன் பேணும் விழிப்புணர்வு முகாமை நடத்தின. இந்த முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளில் நடந்தது. தூத்துக்குடி கால்நடை பன்முக மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சம்பத் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடந்த முகாம்களில் நேற்று ஒரே நாளில் 782 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில், கால்நடை உதவி இயக்குனர் சுரேஷ், டாக்டர் சந்தோசம் முத்துக்குமார், உதவி இயக்குனர்கள், கால்நடை டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.