செய்திகள்
குளச்சல் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குளச்சல் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குளச்சல்:
குளச்சல் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34), மீனவர். இவரது மனைவி சஹானா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சஹானா சில நாட்களுக்கு முன்பு கணவனை விட்டு பிரிந்து சென்றார். அவர் சுரேசிடமிருந்து விவகாரத்து கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், சுரேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அத்துடன் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே ஒரு வாடகை அறையில் தனியாக தங்கி இருந்தார்.
நேற்று காலையில் உறவினர் ஒருவர் சுரேசின் செல்போனை தொடர்பு கொண்டு பேச முயன்றார். நீண்ட நேரம் முயற்சி செய்தும் செல்போன் எடுத்து பேசப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் சுரேஷ் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.