செய்திகள்
தென்திருப்பேரை அருகே மணல் கடத்தல்: 3 பேர் கைது
தென்திருப்பேரை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் ஆற்றுமணல் கடத்தப்படுவதாக குரும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஆற்று மணல் கடத்தியதாக, சேதுக்குவாய்த்தானை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (வயது 19), தெற்கு நல்லூரை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சுகுமார் (20), சேர்ந்தபூமங்கலம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாசானதுரை மகன் உதய ஆசாத் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய ஒரு லாரி, 3 இருசக்கர வாகனங்கள், அரை யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.