செய்திகள்
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

சசிகலா வருகையையொட்டி சென்னையில் விடிய விடிய ரோந்து சுற்றிய போலீசார்

Published On 2021-02-09 09:53 GMT   |   Update On 2021-02-09 09:53 GMT
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்றும் பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா இன்று காலை 6.35 மணி அளவில் தி.நகர் இல்லத்துக்கு சென்றார்.

இதையடுத்து சென்னையில் நேற்று இரவு போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

இதே போன்று ராமாவரம் தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிண்டி கத்திபாரா, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் சாலையோரமாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்றும் பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். கட்சி அலுவலகம் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News