செய்திகள்
கோப்புபடம்

பரமத்திவேலூரில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-02-05 13:01 GMT   |   Update On 2021-02-05 13:01 GMT
பரமத்திவேலூரில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகள் அபிநயா (வயது 13). இவர் பரமத்திவேலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அபிநயா பெற்றோர் மற்றும் பாட்டியிடம் வீட்டிற்கு அருகில் உள்ள சுவற்றில் கருப்பாக பேய் ஒன்று நிற்பதாக கூறினாராம்.

பேய் என்று ஒன்றும் இல்லை பயப்பட வேண்டாம் என கூறிவிட்டு பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மாணவியின் பக்கத்து வீட்டை சேர்ந்த தோழி மற்றும் அபிநயாவின் தங்கை மோனிஷா ஆகியோர் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருப்பதை பார்த்து கதவை தட்டினர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அபிநயா கதவை திறக்காததால் தோழியும், மோனிஷாவும் ஜன்னல் வழியாக பார்த்தபோது அபிநயா வீட்டில் உள்ள கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கூச்சலிட்டனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெற்றோர் வீட்டுக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News