செய்திகள்
பெரம்பலூர் அருகே விபத்து- அரசு மருத்துவமனை ஆய்வக உதவியாளர் பலி
பெரம்பலூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு மருத்துவமனை ஆய்வக உதவியாளர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா(வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக ராஜேஷ்கண்ணா பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று காலை பணி முடிந்து அரசு மருத்துவமனையில் இருந்து, தனது வீட்டுக்கு அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து பெரம்பலூர்- துறையூர் சாலையில், செஞ்சேரி அருகே உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள், அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ்கண்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.