செய்திகள்
பணம் திருட்டு

திருமாந்துறையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

Published On 2021-01-27 06:29 GMT   |   Update On 2021-01-27 06:29 GMT
திருமாந்துறையில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், அருகே உள்ள ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளையும் திருடிச்சென்றனர்.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் தேசிய நெடுஞ்சாலை அருகே செந்தில்குமார் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்த பின்னர், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல் அந்த கடையின் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவன ஷோரூமின் பூட்டையும் உடைத்து உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News