செய்திகள்
மங்களமேடு அருகே கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி
மங்களமேடு அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த கிழுமத்தூர் பூங்காநகர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து(வயது 40). சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக வந்த வீரமுத்து மீண்டும் வேலைக்காக சென்னை செல்லாமல், கடந்த 3 நாட்களாக ஊரை சுற்றி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீரமுத்து பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார், கிணற்றில் இருந்து வீரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விஷம் குடித்த வீரமுத்து கிணற்றில் விழுந்து இறந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.