செய்திகள்
அவினாசி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்- தொழிலாளி பலி
அவினாசி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார். உடன் சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
அவினாசி:
அவினாசி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார். உடன் சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அவினாசியை அடுத்த வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத்குமார் (வயது 23). இவர் அவினாசி அருகே அவினாசி லிங்கம்பாளையத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இவரும், இவரது நண்பரான கருவலூரை சேர்ந்த முத்துசாமி மகன் நந்தகுமாருடன் (23) மோட்டார் சைக்கிளில் அவினாசியிலிருந்து வெள்ளியம்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
வினோத்குமார் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். பின் இருக்கையில் நந்தகுமார் அமர்ந்து சென்றார். இந்த நிலையில் வெள்ளியம் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர் திசையிலிருந்து வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். வினோத்குமாருக்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த நந்தகுமார் சிகிச்சைக்காக அவினாசி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.