செய்திகள்
மதுக்கூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள விக்ரமம் பாரதி நகரை சேர்ந்தவர் சிவராமன் (வயது33). இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் இவருக்கும், அவரது தாய் பரமேஸ்வரிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து சிவராமன் வெளியே சென்றார்.
அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் பாரதி நகரில் உள்ள ஒருவரின் தோப்பில் சிவராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து பரமேஸ்வரி மதுக்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.