செய்திகள்
மதுரவாயல் பகுதியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது
மதுரவாயல் பகுதியில் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை குறிவைத்து அவர்களை தாக்கி செல்போன் மற்றும் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து மதுரவாயல் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
வழிப்பறி சம்பவம் நடந்த இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), யுவராஜ் (20), கார்த்திக் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள், மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை குறிவைத்து கத்தியால் வெட்டியும், இரும்பு பைப்பால் தாக்கியும் செல்போன் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து 4½ பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், 2 மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.