பணகுடி அருகே தோட்டத்தில் பதுக்கிய 2 டன் குட்கா பறிமுதல்
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ராஜாபுதூரில் ஒரு தோட்டத்தில் குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் அங்குள்ள குடோனை ஆய்வு செய்தனர். அதில் சட்ட விரோதமாக 2 டன் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குடோன் உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
குமரி மாவட்டம் காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது43). இவரும் நாகர்கோவில் அருகே உள்ள சுசீந்திரம் பகுதியை சேர்ந்த மது (38) என்பவரும் சேர்ந்து இந்த குடோனில் குட்காவை பதுக்கி உள்ளனர்.
கேரளாவுக்கு கடத்துவதற்காக பெங்களூருவில் இருந்து குட்காவை கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அங்கிருந்து தப்பி செல்ல அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
தற்போது குடோன் உள்ள இடம் திருக்குறுங்குடி போலீஸ் நிலைய எல்கைக்குட்பட்டது என்பதால் பறிமுதல் செய்த ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா மூட்டைகளையும், தொடர்புடைய 2 பேரையும் பணகுடி போலீசார் திருக்குறுங்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.