செய்திகள்
செயின் பறிப்பு

திண்டுக்கல் அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

Published On 2021-01-23 10:34 GMT   |   Update On 2021-01-23 10:34 GMT
திண்டுக்கல் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் 5 பவுன் நகையை 2 பேர் பறித்து சென்றனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகேயுள்ள ஆர்.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி முருகேஸ்வரி (வயது 37). இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை, முருகேஸ்வரி வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டார். அவரை, கணவர் நாகராஜ் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தார். 

திண்டுக்கல் கல்லறைமேடு பகுதியில் 2 பேரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென்று முருகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். 

இதுகுறித்து முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் திண்டுக்கல்லில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கல்லறைமேடு பகுதியில் பட்டப்பகலில் கணவருடன் வந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Tags:    

Similar News