செய்திகள்
தஞ்சை அருகே ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது
தஞ்சை அருகே ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
கள்ளப்பெரம்பூர்:
தஞ்சை அருகே உள்ள மின்னாத்தூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வல்லம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், வல்லம் சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் மின்னாத்தூரில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்னாத்தூர் ஏரிக்கரை அருகே ரோந்து பணி மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை அருகே உள்ள மேலவஸ்தாசாவடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கவுதமன் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஏரிக்கரை அருகே 22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமனை கைது செய்து, அவரிடம் இருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.