செய்திகள்
எடப்பாடி அருகே தாதாபுரத்தில் எருதாட்டம் நடத்த அனுமதி கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
எடப்பாடி அருகே தாதாபுரத்தில் எருதாட்டம் நடத்த அனுமதி கோரி தாலுகா அலுவலகம் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி:
காணும் பொங்கலையொட்டி வேம்பனேரி புதுப்பாளையம், தாராபுரம் மற்றும் கொங்கணாபுரம் ஒன்றியம் முனியம்பட்டி முத்தியம்பட்டி, வெள்ளாளபுரம் பகுதிகளில் எருதாட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு எருதாட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் அனுமதி கேட்காததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எருதாட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாதாபுரம் ஊராட்சியில் ஊர் மாரியம்மன் கோவில் முன்பு எருதாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி கிராம பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் எருதாட்டம் நடத்தாமல் எருதை கோவில் முன்பு கொண்டு வந்து நிறுத்தி திருநீறு இட்டு அழைத்துச் செல்லுமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.