செய்திகள்
மேச்சேரி அருகே பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேச்சேரி:
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் சோளப்பாடியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வெள்ளச்சி (வயது 47). விஜயகுமார் இறந்து விட்டதால், வெள்ளச்சி மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி காட்டுவளவு பகுதியிலுள்ள தனது தம்பி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கூலிவேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு மேச்சேரியில் இருந்து தொப்பூர் செல்லும் ரோட்டில் தெத்திகிரிப்பட்டி அருகே சாலையோரத்தில் வெள்ளச்சி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அவரது காலில் மட்டும் காயம் இருந்தது. இதனால் அவரை யாராவது கொலை செய்து சாலையோரத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றனரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.