செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகம்-டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-01-09 08:13 GMT   |   Update On 2021-01-09 08:13 GMT
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நகர்ந்து வந்தது.

இது தவிர குமரி கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இலங்கை மற்றும் மன்னார்வளைகுடா பகுதி வரை பரவி இருந்தது.

இதனால் நேற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்த நிலையில் இலங்கையொட்டி நிலவி வரும் வளிமண்டல சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.

நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரியில் 6 செ.மீ, குன்னூர், கடலாடி, பெருஞ்சாணி அணை, பட்டுக்கோட்டை, விளாத்திக்குளத்தில் தலா 5 செ.மீ., பேச்சிபாறை, வல்லம் தலா 4 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News