செய்திகள்
கரூரில் கொலை செய்யப்பட்ட சலூன்கடைக்காரரின் உறவினர்கள் காந்திகிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்

காதல் விவகாரம்: சலூன் கடைக்காரர் கொலை வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 2 பேர் கைது - சாலை மறியல் நடந்ததால் பரபரப்பு

Published On 2021-01-08 09:14 GMT   |   Update On 2021-01-08 09:14 GMT
கரூரில் காதல் விவகாரத்தில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சாலைமறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்:

கரூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் மகன் ஹரிஹரன் (வயது 22). இவர் மாரியம்மன் கோவில் வீதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவா் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். நேற்றுமுன்தினம் கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன்பு ஹரிஹரன் அந்த பெண்ணுடன் பேசி கொண்டிருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் அங்கு வந்து ஹரிஹரனை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த ஹரிஹரன் கரூர் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, ஹரிஹரனை கத்தியால் குத்தி கொலை செய்த அந்த பெண்ணின் உறவினர்கள் சங்கர் (47), கார்த்திகேயன் (40) , வெள்ளைசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அந்த பெண்ணின் தந்தை வேலன் (40), உறவினர் முத்து (35) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனையில் குவிந்த ஹரிஹரனின் உறவினர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், கொலைக்கு காரணமான அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி காந்திகிராமத்தில் உள்ள கரூர் -திருச்சி சாலையில் மறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ்ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News