செய்திகள்
சேலத்தில், நூல் மில்லில் ரூ.13 கோடி மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
சேலத்தில் நூல் மில்லில் ரூ.13 கோடி மோசடி வழக்கில் மேலும் 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் தேவராஜன். இவர் உடையாப்பட்டியில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து இருந்தார்.
அந்த புகாரில், தனது மில்லில் காசாளராக பணியாற்றிய அந்தோணி அருள் ராஜ் என்பவர் ரூ.13 கோடி மோசடி செய்து உள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி அருள்ராஜ் உள்பட 5 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோசடி செய்த பணத்தில் இருந்து பலரது வங்கி கணக்கிற்கு அந்தோணி அருள்ராஜ் பணம் அனுப்பி இருப்பது தெரியவந்தது. அவர், வாழப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 45) என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.70 லட்சமும், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (41) என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.14 லட்சமும் அனுப்பி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக கருதி, ராஜ்குமார், செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் யார்? யார்? ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நூல் மில் உரிமையாளரிடம் மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.