செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
ஓட்டப்பிடாரம் அருகே அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டமாக இருந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அனல் மின் நிலையம், கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் மூடி கிடக்கிறது. அங்கு பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் அந்த அனல்மின் நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள மின் ஒயர், எண்ணெய் போன்றவற்றிலும் தீப்பற்றியதால், பல அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டமாக இருந்தது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஓட்டப்பிடாரம், சிப்காட், முத்தையாபுரம், தெர்மல்நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவினால் தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.