செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
சேடபட்டி, நாகையாபுரம், சிந்துபட்டி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. மேலும் பல்வேறு திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்று வந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் உத்தரவின்பேரில் பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு கும்பலை தேடி வந்தனர்.
இதனிடையே சேடப்பட்டி விலக்குப்பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக வந்த தங்களாச்சேரியை சேர்ந்த தங்கமுடி (வயது 32) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.
அதோடு, கோவில் உண்டியல் பணம், மின் மோட்டார், வெள்ளித் தட்டுகள் ஆகியவற்றை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், வெள்ளித்தட்டுகள், மின் மோட்டார்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.