செய்திகள்
கைது

திருச்சி அருகே கல்லூரி மாணவர் ஆட்டோவில் கடத்தல்- 3 பேர் கைது

Published On 2021-01-02 08:33 GMT   |   Update On 2021-01-02 08:33 GMT
திருச்சி அருகே கல்லூரி மாணவரை ஆட்டோவில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம்:

ஸ்ரீரங்கம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் கவுரிசங்கர். கொல்லன் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் குமரவேலு (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையில் அவர் தந்தையுடன் வேலைக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் கொள்ளிடம் சோதனைச்சாவடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை குமரவேல் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த பெண்ணின் தந்தைக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணின் தந்தையின் கடையில் வேலை பார்த்து வரும் மூர்த்தி, தனது நண்பர்கள் குழுமணி பேரூரை சேர்ந்த ஆனந்த் (30), ராஜா(29), ராஜ்குமார் (32) ஆகிய 3 பேருடன் சேர்ந்து குமரவேலை நேற்று முன்தினம் மதியம் ஆட்டோவில் கடத்தினர். பின்னர் அவரை மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரைக்கு கடத்தி வந்தனர். இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், அவர்கள் 5 பேரையும் பிடித்து வைத்துக்கொண்டு, மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதில் மூர்த்தி என்பவர் தப்பி ஓடி விட்டார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் பிடிபட்ட 3 பேரிடம் செய்த விசாரணையில் அவர்கள் குமரவேலை மிரட்டுவதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய மூர்த்தியை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News