செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து 22 கார் பேட்டரிகள் திருட்டு
கடையின் பூட்டை உடைத்து 22 கார் பேட்டரிகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி பாரதிநகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது 39). இவர் சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் கார்களுக்கான பேட்டரி பழுது நீக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக அய்யனார் வந்த போது, கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைத்திருந்த 2 புதிய பேட்டரிகள் உள்பட 22 கார் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பழனி டவுன் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகமுள்ள பைபாஸ் சாலையில் உள்ள கடையின் பூட்டை உடைத்து பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி கடைக்காரர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.