செய்திகள்
தற்கொலை

திருச்செந்தூரில் பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-12-27 14:36 GMT   |   Update On 2020-12-27 14:36 GMT
திருச்செந்தூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகர் சுவைக்கின் காலனியை சேர்ந்தவர் மெர்வின் (வயது 46). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பவிதா (46). இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடைய 3 மகன்களும் ஊரில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை பார்க்க சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்து திடீரென பவிதாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே வீட்டின் மாடியில் இருந்த மெர்வின் கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது சமையல் அறையில் தனது மனைவியின் உடலில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் குடத்தில் இருந்த தண்ணீரை தூக்கி மனைவியின் மீது ஊற்றி தீயை அணைத்தார்.

பின்னர் பவிதாவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பவிதா நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், பவிதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News