செய்திகள்
ஏழுமலை- ராஜம்மாள்

ஆவடி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்

Published On 2020-12-27 14:19 GMT   |   Update On 2020-12-27 14:19 GMT
ஆவடி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி:

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், புதிய அண்ணா நகர், நேரு தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 85). இவருடைய மனைவி ராஜம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகன். 3 மகள்கள் உள்ளனர்.

முதியவர் ஏழுமலை, அம்பத்தூர் ஏரியில் மீன் பிடித்தும், மூதாட்டி ராஜம்மாள் அப்பகுதியில் வீட்டு வேலைகள் செய்தும் பிழைத்து வந்தனர்.

கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தனர். வைகுண்ட ஏகாதசியான நேற்று முன்தினம் முதியவர் ஏழுமலை திடீரென உயிரிழந்தார்.

தந்தை ஏழுமலை உயிரிழந்த தகவலை அவரது மகன் பாலன், தாய் ராஜம்மாளிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, படுக்கையிலேயே கண்ணீர் வடித்தபடி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் அவரும் உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

கணவன்-மனைவி இருவரும் வைகுண்ட ஏகாதசி அன்று உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News