செய்திகள்
தர்மபுரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அசோக் குமார், மாவட்ட பொருளாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சங்க மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சுருளி நாதன், மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் நடப்பு ஆண்டிற்கான காலியிடமதிப்பீடு அறிக்கையை ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசாரத்திற்குட்பட்டு மறு நிர்ணயம் செய்யவேண்டும்.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிடவேண்டும். அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
குடும்ப பதுகாப்பு நிதியை உயர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.