செய்திகள்
தலைமைச் செயலாளர் சண்முகம்

கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் நாளை மறுதினம் ஆலோசனை

Published On 2020-12-24 01:48 GMT   |   Update On 2020-12-24 01:48 GMT
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் நிலை பற்றி கலெக்டர்களுடன் நாளை மறுதினம் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமை செயலாளர் கே.சண்முகம் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பரவல் நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவுடனும் மாத இறுதியில் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களுக்கு பின்னர் கொரோனா ஊரடங்கு நீடிப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று பொதுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டத்தை தமிழக தலைமை செயலாளர் நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் 26-ந்தேதி (நாளை மறுதினம்) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.

மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள்; வறுமை கோட்டுக்கு கீழ் வருவோருக்கான காப்பீட்டு திட்டம்; பிரதமரின் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் வரும் ஊரக வீட்டு வசதி திட்டம்; கொரோனா மேலாண்மை உள்ளிட்ட சில அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

எனவே இவை பற்றிய முழு விவரங்களுடன் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News