செய்திகள்
செல்போன், இருசக்கர வாகனம் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், இருசக்கர வாகனம் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 25 வயது வாலிபர் கடந்த மாதம் 11-ந் தேதி இரவு காவிலிபாளையம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வாகனத்தை வாலிபர் ஒருவர் நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றார். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுண்டிபுரத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 22) என்பவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
நந்தகுமார் மீது ஏற்கனவே அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க முயற்சி செய்தது தொடர்பாக ஒரு வழக்கும் உள்ளது. எனவே நந்தகுமாரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கோவை சிறையில் உள்ள நந்தகுமாரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் இந்த ஆண்டில் இதுவரை 43 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.