செய்திகள்
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதையும் படத்தில் காணலாம்.

கார் மெக்கானிக் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2020-12-12 18:29 GMT   |   Update On 2020-12-12 18:29 GMT
அவினாசி அருகே கார் மெக்கானிக் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
அவினாசி:

அவினாசியை அடுத்து உள்ள ரங்கா நகரில் வசிப்பவர் ஜெயராஜ் (வயது 41). கார் மெக்கானிக். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் நேற்று வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் ஆரம், 2 பவுன் கம்மல், ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயராஜ் அவினாசி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைரேகை நிபுணர்கள் வந்து மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் மற்றும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து சென்றனர். அடுத்தடுத்து குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8-ந்தேதி அவினாசி கைகாட்டிபுதூரில் காலை நேரத்தில் வீட்டின் முன்பு பூ பறித்து கொண்டிருந்த ஒரு பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. அதேபோல் கடந்த 10-ந்தேதி ஸ்கூட்டரில் சென்ற ஒரு பெண் அணிந்திருந்த நகை பறிப்பு உள்ளிட்ட தொடர் திருட்டு சம்பவங்கள் அவினாசி வட்டாரத்தில் நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News