செய்திகள்
கண்காணிப்பு கேமரா கோபுரத்தில் பாலன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போது எடுத்தபடம்.

திருவெறும்பூரில் கண்காணிப்பு கேமரா கோபுரத்தில் ஏறி லாரி கிளீனர் தற்கொலை முயற்சி

Published On 2020-12-11 23:30 GMT   |   Update On 2020-12-11 23:30 GMT
திருவெறும்பூரில் நேற்று அதிகாலை லாரி கிளீனர் ஒருவர் கண்காணிப்பு கேமரா கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர்:

திருவெறும்பூர் பெல் கணேசபுரத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 52). லாரி கிளீனர். இவர் நேற்று அதிகாலை அங்குள்ள 60 அடி உயரமுள்ள கண்காணிப்பு கேமரா கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், இதுபற்றி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே, திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் நவல்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுமார் 2½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், பாலனுக்கும், அவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், இதுகுறித்த புகாரின் பேரில் பாலன் வீட்டிற்கு திருவெறும்பூர் போலீசார் அடிக்கடி சென்று விசாரித்து வந்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. மேலும் கணேசபுரம் அருகே பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும் அவர் கோரிக்கை வைத்ததாக போலீசார் கூறினர்.
Tags:    

Similar News